Design & Development
Graphic Designing | Web Development
‘எழில்நிலா’ இணையத்தளத்திலிருந்து சேமிக்கப்பட்ட சில ஆக்கங்கள்
Some articles archived from ‘ezilnila.ca’

போர்க்காலக் கவிதைகள்

எழுதியவர்: நளினி மகேந்திரன்

அம்மா நீ எங்கே?

உலகிலே சிறந்தது
உயிரினும் மேலாலனது
உன் பாசம்;
உன் நேசம்;
உன் அன்பு;
உன் அரவணைப்பு
எல்லாமே தேவையே எனக்கின்று
அம்மா நீ இன்று
எவ்வூரில் ஓடுகின்றாய்?

கோரப்புயல் போல
கொடுமைகள் புரிந்துநிற்கும்
கொடியவர் துரத்தினரா?
கொண்டதே கோலமாக
கொடுந்துயர் கொண்டு நீயும்
கலங்கியே ஓடினாயோ?

கணவனே துணை என்றாய்
கடல் கடந்து வந்து விட்டேன்
கண்காணா ஊரிலின்று
கண்கலங்கி நிற்கின்றேன்
அம்மா உனை என்று காண்பேன்
உன் கையால் சோறு உண்ண ஆசை
என் பிள்ளையை நீ அள்ளி
அணைத்து மகிழ்வதைக்காண ஆசை

ஆயிரம்பேர் இருந்தென்ன
ஆயிரமாய் பணம் வந்தென்ன
ஆளாக்கி வளர்த்த உன்
அன்பு மனம் தவிக்கின்றதே

தத்தித் தத்தி நடக்கையிலே
தள்ளாடி விழுமென்னை
தாவியே ஓடிவந்து
தாங்கியே நீ பிடித்தாய்
தளர் நடை போட்டு நீ
தள்ளாடி நடக்கையிலே
தள்ளியே நானிருந்து
தவிக்கின்ற தவிப்புக்களை
என்னென்று உரைத்திடுவேன்

உனைப் பிரிந்த பின்தானே
உனை எண்ணிப்பார்க்கின்றேன்
தாயான பின்தானே
தாய்ப்பாசம் உணர்ந்திட்டேன்
என்செய்வேன் ஏதுசெய்வேன்
என்றேங்கி வாடுகின்றேன்
அம்மா நீ எங்கே?

---