Design & Development
Graphic Designing | Web Development
‘எழில்நிலா’ இணையத்தளத்திலிருந்து சேமிக்கப்பட்ட சில ஆக்கங்கள்
Some articles archived from ‘ezilnila.ca’

போர்க்காலக் கவிதைகள்

எழுதியவர்: நளினி மகேந்திரன்

அன்னையின் மடல்

நீண்ட நாட்களின்பின்
நீண்டதோர் மடலதனை
அன்னையவள் வடித்திருந்தாள்
அன்பான வார்த்தைகளில்

பெற்றவளின் கடிதம் கண்டு
பேரானந்தம் கொள்ளவில்லை
தாயவளின் வரிகள் கண்டு
தளர்ந்து தான் போய் விட்டேன்

கடவுளவன் கருணைதனை
நாம் செய்யும் உதவியென்றாள்
நன்றிகள் பல சொன்னாள்
டொலர்கள் பல பெற்றதற்காய்

பல தடவை கேட்டிருந்தாள்
பெற்றவள் எம் சுகங்களை
பக்குவம் பல சொல்லி
பாங்காய் எழுதியுள்ளாள்

கடன் காரியானதாய்
கதிகலங்கிப் போயிருந்தாள்
எங்கள் நிம்மதியைக் குலைப்பதாய்
எழுத்திலே வடித்திருந்தாள்

எத்தனை பிறவிகள் தேவையம்மா
உன் கடன் தீர்க்க
கடன் காரி நானம்மா
கதறியழத் துடிக்கின்றேன்

---