Design & Development
Graphic Designing | Web Development
‘எழில்நிலா’ இணையத்தளத்திலிருந்து சேமிக்கப்பட்ட சில ஆக்கங்கள்
Some articles archived from ‘ezilnila.ca’

படித்துச்சுவைத்தவை

வானமே எல்லை!

இது கதையா, இல்லை உண்மையாவென்று தெரியவில்லை.

கிழக்கு ஆசிய நாடுகளில், ஒருவிதமான பூச்சியை பிடித்து, ஒரு கண்ணாடி பெட்டியினுள் அடைத்து மூடிவிடுவார்கள். அந்த கண்ணாடியில் சிறிய துவாரங்கள், சுவாசிப்பதற்காக இருக்கும். அந்த பூச்சியானது, மேலே நோக்கிப் பறந்து, வெளியே போக முயற்சி பண்ணும். மேலே உள்ள கண்ணாடியில் இடித்து, “ஆ! அம்மா !! வலிக்குதே, இனி மேலே நோக்கிப் போகும் போது பார்த்து போகனும் ” என்று தீர்மானித்துக் கொள்ளும்.

அதேபோல, இடது புறம் உள்ள கண்ணாடி வழியாக, வெளியே செல்ல முயற்சிக்கும். அதே அடி. அதே வலி. அதே தீர்மானம்.

இப்படியாக எல்லா திசைகளிலும், பறந்து, வெளியே செல்ல முயன்று, இறுதியாக ஒரு முடிவுக்கு வந்துவிடும்.

சரி, இதுதான் நமது விதி. இந்த கூண்டுக்குள் தான் இனி நம் வாழ்நாளை கழிக்க வேண்டும் போல இருக்கு. இனியும் முயற்சி செய்து பலன் இல்லை.

ஆக, இந்த கூண்டுக்குள், நாம் எப்படி சந்தோஷமாக, நிம்மதியாக இருக்கலாம் என்று எண்ணத் தொடங்கிவிடும். அதோடு கூண்டை தாண்டி வெளியே செல்லும் முயற்சியை கைவிட்டு விடும்.

இப்போது மேலே நோக்கி பறக்கும். சரியாக ஒரு இன்ச் தூரத்தில், பிரேக் போட்டது போல் நின்று விடும்.

இந்த தடவை, கண்ணாடியில் இடி இல்லை. வலி இல்லை.

அதே போல், இடது பக்கம் பறக்கும். ஒரு இன்ச் தூரத்தில் நின்று விடும்.

அனைத்து பக்கங்களிலும் பறக்கும். எந்தக் கண்ணாடியிலும் இடிக்காமல் பறக்கும். அந்த திறமையை, வாழ்க்கை அளித்த பாடம் என்று பெருமையாக எண்ணிக் கொள்ளும்.

இப்படி, அந்த பூச்சி, எந்த பக்கத்திலும் இடிக்காமல் பறப்பதை பார்த்தவுடன், அவர்கள், மேலே உள்ள கண்ணாடி, மற்றும் பக்கங்களில் உள்ள கண்ணாடியை எடுத்து விடுவார்கள்.

இப்போது, மேலே கண்ணாடி இல்லை. பக்கங்களில் கண்ணாடி இல்லை.

ஆனால், அந்த பூச்சி, ஆனந்தமாக, இன்னும் அந்த ஒரு இன்ச் தூரத்தில் பிரேக் போட்டு நின்று, இல்லாத கண்ணாடிகளில் இடிக்காமல், அந்த வேலி இல்லாத பெட்டிக்குள், தன் வாழ்க்கையை வாழ்ந்து கொண்டு இருக்கிறது.

அந்த பூச்சி மட்டும், பழைய வலியை மறந்து, கொஞ்சம் புது முயற்சி செய்து இருந்தால்…

அந்த ஒரு இன்ச் தூரத்தை கடந்து இருக்கும்.

ஒரு இன்ச் தூரத்தைக் கடந்து இருந்தால், இந்த உலகத்தையே சுற்றி வந்து இருக்கும்.

நம்மில் பலர், இந்த பூச்சியை போன்று வாழ்ந்து கொண்டு இருக்கிறோம்.

முயற்சி செய்வதை கைவிட்டு விடுவது உண்டு.

இல்லாத வேலியினுல், எதிலும் இடிக்காமல், வீணாக எந்த புது முயற்சியிலும் ஈடுபடமால், இது தான் விதி என்று, வாழ்ந்து கொண்டு இருக்கிறோம்.

நாம், அந்த ஒரு இன்ச் தூரத்தை தாண்டி விட்டால்…

வாழ்க்கையில் நாம் சாதனை புரிய …

வானமே எல்லை !